←1. ஆற்றுப் படலம்

கம்பராமாயணம்  ஆசிரியர் கம்பர்பாலகாண்டம்

3. நகரப் படலம்→

 

 

 

 

 


714கம்பராமாயணம் — பாலகாண்டம்கம்பர்


2. நாட்டுப் படலம்


வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன். 1

வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணில மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரும்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம். 2

ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலைச்
சாறு பாய் ஓதை வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும்மா மருத வேலி. 3

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4

தாமரைப் படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார்க்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளு மன்னோ. 5

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை யுறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை யுறங்கும் ஆமை துறையிடை யுறங்கும் இப்பி
போரிடை யுறங்கும் அன்னம் பொழிலிடை யுறங்கும் தோகை. 6

படை உழ எழுந்த பொன்னும் பனிலங்கள் உதிர்த்த முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இன மணித்தொகையும் நெல்லின்
மிடை பசுங்கதிரும் மீனும் மென் தழைக் கரும்பும் வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மதோ. 7

தெள்விளிச் சீறியாழ்ப் பாணர் தேம்பிழி நறுவ மாந்தி
வள்விசிக் கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளிவெண் மாடத் தும்பர் வெயில்விரி பசும்பொற் பள்ளி
எள்ளருங் கருங்கள் தோகை இன்துயில் எழுப்பும் அன்றே. 8

ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்தோடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாங் களிக்குமாதோ. 9

பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கைகால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையி லாமை
உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பார்
பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பாரோ சிறியோர் பெற்றால். 10

புதுப்புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்புறு வெறியே நாறுங் கருங்கடல் தரங்கமென்றால்
மதுப்பொதி மழலைச் செவ்வாய் வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்புற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமோ. 11

வெண்தளக் கலவைச் சேறும் குங்கும விரைமென் சாந்தும்
குண்டலக் கோல மைந்தர் குடைந்தநீர்க் கொள்ளை சாற்றின்
தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டலிட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ. 12

சேலுண்ட ஒண் கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்பச் செர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை. 13

குயிலினம் வதுவை செய்யக் கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்யப்
பயில்சிறை யரச அன்னம் பன்மலர்ப் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை. 14

பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று என்ன இயல் இசை பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணிவிரும்புவாரும். 15

கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி உறுபகை யின்றிச் சீறி
வெறுப் பில களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட வாவி பேணா வாரணம் பொருத்து வாரும். 16

எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னதாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும். 17

முள்ளரை முளரி வெள்ளி முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்பு வாரும். 18

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல். 19

எறிதரும் அரியின் சும்மை எடுத்தவான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்திற் கொல்வார் கொன்றநெற் குவைகள் செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்துண மனையில் உய்ப்பான்
நெறிகளும் புதையப் பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார். 20

கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள
முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள
மதுவள மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார். 21

முந்துமுக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டங் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின்
தந்தம் இல் இருந்து தாமும் விருந் தொடும் தமரி னோடும்
அந்தணர் அமுது அருத்தி அயிலுறும் அமலைத்து எங்கும். 22

பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து
உருவ உண்கணை ஒண்பெடை யாம் எனக்
கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டரோ. 23

வேளை வென்ற விழிச்சியர் வெம்முலை
ஆளை நின்று முனிந்திடும் அங்கொர்பால்
பாளை தந்த மதுப்பரு கிப்பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கெலாம். 24

ஈர நீர் படிந்து இன்னிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை
தாரை கொள்ள தழைப்பன சாலியே. 25

முட்டு இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்
பட்ட மென் கழுகு ஓங்கு படப்பை போய்
நட்ட செந்நெல்லின் நாறு வளர்க்குமே. 26

சூட்டுடைத் துணைத் தூ நீற வாரணம்
தாள் துணைக் குடைய தகை சால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ. 27

தோயும் வெண்தயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட்டு அரற்றவும்
தேயு நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28

தினைச்சி லம்புவ தீஞ்சொல் இளங்கிளி
நனைச்சி லம்புவ நாகிள வண்டு பூம்
புனைச்சி லம்புவ புள்ளினம் வள்ளியோர்
மனைச்சி லம்புவ மங்கல வள்ளையோ. 29

குற்ற பாகு கொழிப்பவர் கோள்நெறி
கற்றி லாத கருங்கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்துதம் முன்றிலில்
சிற்றில கோலிச் சிதறிய முத்தமே. 30

துருவை மென்பிணை ஈன்ற துளக்கிலா
வரிம ருப்பிணை வந்தலை யேற்றைவான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஓதையின்
வெருவி மால்வரைச் சூல்மழை மின்னுமே. 31

கன்று உடை பிடி நீக்கிக் களிற்றினம்
வன்றொடர்ப் படுக்கும் வன வாரிசூழ்
குன்று டைக் குல மள்ளர் குழூஉக்குரல்
இன் துணைக்களி யன்ன மிரிக்குமே. 32

வள்ளி கொள்பவர் கொள்வன மாமணித்
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன்விரி புன்னையிற்
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே. 33

கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலில்
கன்று உறங்கும் குரவை கடைசியர்
புந்த லைப்புனம் காப்புடை போதரச்
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி. 34

சேம்பு காலிறச் செங்கழு நீர்க்குளத்
தூம்பு காலச் சுரிவளை மேய்வன
காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரைப்
பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே. 35

பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே. 36

பிறை முகத் தலை பெட்பின் இரும்பு போழ்
குறை நறைக் கறிக் குப்பை பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை
உறைவ கொட்பின் ஊட்டிடம் தோறெலாம். 37

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம். 38

கூற்றம் இல்லையொர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அன்றி இழித்தகவு இல்லையே. 39

நெறிக டந்து பரந்தன நீர்த்தமே
குறிய ழிந்தன குங்குமத் தோள்களே
சிறிய மங்கையர் தேயு மருங்குலே
வெறிய வும்மவர் மென்மலர்க் கூந்தலே. 40

அகில்இ டும்புகை அட்டில் இடும்புகை
நகலின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியிற் பூம்புகை யோடளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும். 41

இயல்புடை பெயர்வன மயின்மணி யிழையின்
வெயில்புடை பெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி. 42

இடையிற மகளிர்கள் எறிபுனல் மறுகக்
குடையவர் துவரிதழ் அலர்வன குமுதம்
மடைபெயர் அனம்என மடநடை யிளகக்
கடைசியர் முகமென மலர்வன கமலம். 43

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினை நகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம். 44

பகலினொடு இகலுவ படர்மணி மடவார்
நகிலினொடு இகலுவ நனிவளர் இளநீர்
துகிலினொடு இகலுவ சுதைபுரை நுரைகார்
முகிலினொடு இகலுவ கடிமண முரசம். 45

காரொடு நிகர்வன கடிபொழில் கழனிப்
போரொடு நிகர்வன பொலன்வரை யணைசூழ்
நீரொடு நிகர்வன நிறைகடல் நிதிசால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம். 46

நெல்மலை யல்லன நிரைவரு தரளம்
சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
நன்மலை யல்லன நதிதரு நிதியம்
பொன்மலை யல்லன மணிபடு புளினம். 47

பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தனவனம் அல சண்பக வனமாம்
நந்தன வனம் அல நறை விரி புறவம். 48

கோகிலம் நவில்வன இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம். 49

பழையர்தம் மனையன பழ நறை நுகரும்
உழவர்தம் மனையன உழு தொழில் புரியும்
மழவர்தம் மனையன மணஒலி இசையின்
கிழவர்தம் மனையன கிளை பயில் வளை யாழ். 50

கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் 51

இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தைபோல்
தடங் கொள் சோலைவாய் மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவனதோகை மஞ்ஞையே. 52

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால். 53

எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்
தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே. 54

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்த்
தயிரும் வேரியும் தலைமயங்குமே. 55

கூறு பாடலும் குழலின் பாடலும்
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே. 58

பொற்பின் நின்றன பொலிவு பொய்யிலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன காலமாரியே. 59

சோலை மாநிலந் துருவி யாவரே
வேலை கண்டுதா மீள வல்லவர்
சாலும் வார்புனல் சரயு வும்பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே. 60

வீடு சேரநீர் வேலை கால்மடுத்து
ஊடு பேரினும் உலைவி லாநலம்
கூடு கோசலம் என்னும் கோதிலா
நாடு கூறினாம் நகரம் கூறுவாம். 61

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel